• June 6, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர மற்ற ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்த நிலையில், திமுக மேலிடம், தொகுதி வாரியாக எந்த தொகுதி திமுகவிற்கு சாதமகாக இருக்கிறது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், அவருடைய ப்ளஸ் மைனஸ் என்பது உள்ளிட்டவை குறித்து சத்தமில்லாமல் சர்வே ஒன்றை எடுத்து வருகிறது என்கிறார்கள் கட்சி வட்டாரத்தினர் சிலர்.

பேராவூரணி

இதில் பேராவூரணி தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேயில் திமுக சற்று வீக்காக இருப்பது தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பேராவூரணி தொகுதி சிட்டிங் திமுக எம்.எல்.ஏ அசோக்குமார் மீது கட்சியினரிடம் நிலவும் அதிருப்தி, பேராவூரணி பேரூராட்சி தொடர்பாக எழுந்த முறைகேடு புகார், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் போன்றவை இதற்கான காரணம் என்கிறார்கள். எனவே வீக்காக உள்ள பேராவூரணி மீது திமுக தலைமை தனி கண் வைத்திருப்பதாக கட்சியினரால் பேசப்படுகிறது.

இது குறித்து விபரம் அறிந்த திமுக வட்டாரத்தில் பேசினோம், “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக-வில் பேராவூரணி தொகுதி வேட்பாளர் சீட்டை பிடிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ அசோக்குமார், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அருள்நம்பி, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் டாக்டர் சந்திரசேகர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் இந்த ரேஸில் முக்கிய இடம் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

அருள்நம்பி

அசோக்குமார் எம்.எல்.ஏ, 2016 தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சொற்ப வாக்கு வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். தெற்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளரான செல்வராஜ் செய்த உள்ளடி வேலையால் தான் தோல்வியை தழுவியதாக அசோக்குமார் அப்போது புலம்பினார். தோல்வி அடைந்தாலும் அந்த சமயத்தில் கட்சியில் ஆக்டீவாக இருந்தார். மக்களிடத்தில் தன் செல்வாக்கை தக்க வைத்து கொண்டார். இதன் பலனாக 2021ல் அசோக்குமார் தான் வேட்பாளருக்கு சரியான சாய்ஸ் என ஸ்டாலின் தொடங்கி அனைவரும் பேசினர்.

சொன்னது போல் 2021ல் தலைமை வாய்ப்பு வழங்க வெற்றியும் பெற்றார். அதன் பிறகு அசோக்குமார் கட்சியினரிடத்திலும், மக்களிடத்தில் இடைவெளியை ஏற்படுத்தி கொண்டார். பொருளாதார உதவி கேட்டு யார் சென்றவர்களிடம் நானே கடனில் இருக்கிறேன் எனவும் புலம்ப ஆரம்பித்தார். இது அசோக்குமாரிடம் அதுவரை யாரும் காணாதது.

தெற்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளரான செல்வராஜின் மருமகள் சாந்தி பேராவூரணி பேரூராட்சி சேர்மனாக இருந்ததை பயன்படுத்தி, செல்வராஜ் பின்னணியில் இருந்து பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாக திமுகவை சேர்ந்த ஒருவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முத்துமாணிக்கம்

செல்வராஜை கண்டிக்க வேண்டிய அசோகுமார், அவருடன் நட்பு காட்டினார். முறைகேடு விவகாரத்தை தலைமையின் கவனத்துக்கும் எடுத்து செல்லவில்லை. இதை முன் வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவினர் பேராவூரணியில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர், அறிவாலயத்தில், செல்வராஜ் தரப்பையும், வழக்கு தொடந்தவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அசோக்குமாரிடம் தலைமை கழக நிர்வாகிகள் கடிந்து கொண்டனர். இது போன்ற பல காரணங்களால் கட்சியினர் அசோகுமார் மீது அதிருப்தியடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் சீட் வாங்கி விட வேண்டும் என்பதற்காக தன்னை பழைய மாதிரி மாற்றிக்கொண்டார் அசோகுமார். ஆனால் இது அவருக்கு கைகொடுக்கவில்லை. அதிமுக-வைச் சேர்ந்த அருள்நம்பி கடந்த தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத அதிருப்தியில் திமுகவிற்கு தாவினார். முன்னாள் எம்.எல்.ஏ குழ.செல்லையா மகன் என்கிற அடையாளத்துடன் முத்தரையர் சமூகத்திலும் செல்வாக்கு பெற்றுள்ள அருள்நம்பிக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் தரப்படவிலை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த முறை திமுகவில் சீட் வாங்கி விட அருள்நம்பி மெனக்கெடுகிறார். டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளரான, அமைச்சர் கே.என். நேரு மூலம் காய் நகர்த்தும் அருள்நம்பி தன் இல்ல திருமணத்தை நேரு தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

அன்பழகன்

சேதுபாவாசத்திரம் யூனியன் சேர்மனாக இருந்த முத்துமாணிக்கம் முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தியின் மகன் என அறியப்பட்டவர். அசோகுமாரும், முத்துமாணிக்கமும் மாமன், மச்சான். அரசியல் என வந்துவிட்ட பிறகு உறவுகளுக்கு இடமில்லை என்பார்கள். அது போல் சொந்த பந்தமெல்லாம் இரண்டாம் பட்சம் தான் என முத்துமாணிக்கம், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மூலம் காய் நகர்த்துகிறார். இதனால் அசோக்குமாரும், முத்துமாணிக்கமும் திரைமறைவில் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர்.

யூனியன் சேர்மன் தேர்தல் சமயத்தில் கடும் நெருக்கடியில் இருந்த முத்துமாணிக்கத்தை அதிலிருந்து மீட்டு பொருளாதார உதவி செய்து சேரமன் ஆக்கினேன். ஆனால் அவரே இப்போது எனக்கு கடும் போட்டியாக முன் நிற்கிறார். எனக்கு எதிராகவும் பேசுகிறார் என உறவுகள் சிலரிடத்தில் அசோகுமார் மனம் வெதும்பியிருக்கிறார்.

கட்சியில் சீனியரான அன்பழகன், இளைஞரணியில் ஆக்டீவாக இருக்கும் டாக்டர் சந்திரசேகர், தேமுதிகவில் இருந்து திமுகவிற்கு தாவிய ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் தங்களுக்கு நெருக்கமான முதற்கட்ட தலைவர்கள் மூலம் மெனக்கெடுகின்றனர்.

டாக்டர் சந்திரசேகர்

இதனிடையே திமுக கூட்டணியில் பேராவூரணி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் பட்டுக்கோட்டை மகேந்திரன், மாவட்ட கவுன்சிலராக இருந்த தொழிலதிபர் நெப்போலியன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பேராவூரணியில் திமுக-வினருக்கு அதிமுகவினர் கடும் போட்டி அளிப்பார்கள் என்றே சொல்லப்படுகிறது. திமுக தலைமை எடுத்த சர்வேயில் பேராவூரணி வீக்காக இருப்பது தெரிய வந்துள்ளதால் தஞ்சமை மாவட்டத்தின் எட்டு தொகுதிகளையும் கைப்பற்றுகிற முனைப்பில் இருக்கும் திமுக தலைமை பேராவூரணியில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *