
நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்ட்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த பயிற்சி மையம், இந்திய காலாட்படையில் முக்கியத்துவம் வாய்ந்த ரெஜிமென்ட் சென்ட்டராக விளங்கி வருகிறது.
குறிப்பாக எல்லை பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இந்த மையத்தில் தற்போது பயிற்சியை நிறைவு செய்திருக்கும் 551 அக்னி வீரர்களும் பாரம்பர்ய முறையில் உப்பை உண்டு புனித நூல்களான பகவத் கீதை, குரான், பைபிள் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் ஏற்றுக்கொண்டு எல்லைப் பாதுகாப்பு பணிக்கு கிளம்பி வருகின்றனர்.
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அக்னி வீரர்களிடம் உரை நிகழ்த்திய கர்நாடகா, கேரளா ராணுவ கமாண்டிங் அலுவலர் மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ , ” மிகவும் பழைமையான மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், அதன் கடுமையான பயிற்சி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் சிறந்த படைப்பிரிவாக பங்காற்றி வருகிறது. இங்கு பயற்சிபெறும் அக்னி வீரர்கள் தேசத்தை பாதுகாக்கவும்,

படைப்பிரிவு நெறிமுறைகளின் மதிப்புகளை நிலைநிறுத்தவும் பெரிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். படைப்பிரிவின் வளமான பாரம்பர்யத்தை முன்னெடுத்துச் செல்லவும், அசைக்க முடியாத விசுவாசம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். நாட்டு இளைஞர்களின் வலிமையில் தேசத்தைக் கட்டி எழுப்புவதில் அக்னிபத் திட்டம் முக்கியத்துவம் பெற்று, அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியிருக்கிறது ” என்றார் .