
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53).
இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில், அங்கேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மனைவி ஜெயலட்சுமி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர்,
“என் கணவர் குணசேகரன், கடந்த 2017-ம் வருஷம், நவம்பர் மாதம், 20-ம் தேதி கனடாவில் இறந்தார். அங்கேயே அவரது உடலை அடக்கம் செய்து, இறப்பு சான்றிதழையும் அனுப்பி வைத்தனர்.
சம்பளம் நிலுவை மட்டும், 5.98 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதன் பின், இறப்புக்கான இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை, 7.50 லட்சம் ரூபாயை கொத்தமங்கலத்தைச் சேர்ந்த தங்கமணி, மாங்குடியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர், பெருந்துறையிலுள்ள அந்த நிறுவனத்திற்குச் சென்று, எனக்குப் பதிலாக வேறு பெண்ணையும், குழந்தைகளையும் அழைத்துச் சென்று என் கணவரின் மனைவி, பிள்ளைகள் போல் போலியாகக் காட்டி நம்பவைத்து, எனக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.
என் பணத்தை அவர்களிடம் இருந்து மீட்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் புகார் பற்றி விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.