
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை இந்த நேரம் ஒரு பெருங்கூட்டம் கோலியை காணப் போகிறோம், கொண்டாடப் போகிறோம் என பல நூறுக் கனவுகளுடன் திரண்டிருந்தது. ஆனால், சில நிமிடங்களில் கூட்ட நெரிசல், கூச்சல், குழப்பம் என பதற்றம் நிலவ 11 உயிர்கள் பறிபோயின. அரசு, போலீஸ், ஆர்சிபி என யாரும் எதிர்பார்த்திராத பெருந்துயரம் தான். என்றாலும் அரசு இயந்திரங்கள் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு நகர்ந்து செல்லும், காவல் துறை தன் கடமைகளில் கருத்தாகிவிடும். ஆர்சிபி இனி அடுத்த ஐபிஎல் தொடருக்கு உயிர் பெறும். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு மட்டுமே இச்சம்பவத்தினால் தீரா வேதனையும், நீங்கா துயரமும்!
ரூ.50 லட்சம் தருகிறேன்… – அப்படி தாங்க முடியாத துன்பத்துக்குள் சிக்கிய தந்தை ஒருவர் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ”சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல் என்ற செய்தியைப் பார்த்தவுடனேயே நான் என் மகனுக்கு ஃபோன் அடித்தேன். ஆனால் அவன் எடுக்கவில்லை. எனக்கு நெருடலாக இருந்தது. சிறிது நேரத்தில் எனக்கு போன் வந்தது. போலீஸ் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து ஒரு சடலத்தை அடையாளம் காணச் சொன்னார். எனக்கு அதற்கான தைரியம் இல்லை.