
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
மொய்த்ரா கடைசியாக வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் மூன்று ஆண்டுகள் உறவில் இருந்ததாக பேசப்பட்டது. ஆனால் ஜெய் ஆனந்த் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி பின்னர் அந்த உறவை துண்டித்துக்கொண்டார், மொய்த்ரா. இந்நிலையில் தற்போது திடீரென பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பினாகி மிஸ்ரா பூரி தொகுதியில் இதற்கு முன்பு எம்.பி.யாக இருந்தார். இவர்களது திருமணம் ஜெர்மனியில் நடந்திருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் கையை கோத்தபடி வெளியில் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் இத்திருமணம் குறித்து மொய்த்ராவோ அல்லது அவரது கட்சியோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மொய்த்ரா திருமணம் செய்திருக்கும் பினாகி மிஸ்ராவிற்கு 65 வயதாகிறது. மொய்த்ரா இதற்கு முன்பு பல்வேறு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பாராளுமன்றத்தில் அதானி தொடர்பாக கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவர் பதவி பறிக்கப்பட்டது. அப்படி இருந்தும் பாராளுமன்ற தேர்தலில் மொய்த்ராவை திரிணாமுல் காங்கிரஸ் நிறுத்தியது. இதில் மொய்த்ரா வெற்றி பெற்று மீண்டும் எம்.பியாகி இருக்கிறார். இச்செய்தி சமூக வலைதளத்தில் வெளியானவுடன் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.