
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமரர் அறையில் இருந்த முதியவர் உடல் மாயமானதால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புஜ்ஜிரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (64). தீராத வயிற்று வலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதியுற்று வந்த இவர், கடந்த 2-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று ராஜேந்திரன் உயிரிழந்தார்.