
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 4) வெற்றிப் பேரணி விழா பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் நீண்ட நெடுங்காலம் கோப்பை வெல்லாத அணியாக இருந்தது ஆர்சிபி. இருப்பினும் அந்த அணிக்கு உத்வேகமும், உற்சாகமும் கொடுத்தனர் அதன் மாறா பற்றுக் கொண்ட ரசிகர்கள். ஆர்சிபி பட்டம் வென்றதும் செவ்வாய்க்கிழமை பின்னிரவு பெங்களூரு நகரம் முழுவதும் தீபாவளி திருவிழா போல பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.