
பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார்.
கூடவே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இருப்பினும், இந்த சம்பவத்துக்கு மாநில அரசுதான் காரணம், அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
மறுபக்கம், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “இதுபோன்ற சம்பவம் எந்த மாநிலத்திலும் நடக்கலாம். எனவே, ஆளுங்கட்சியைக் குறைகூறி இதை அரசியலாக்க வேண்டாம்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும், ஆர்.சி.பி அணி நிர்வாகம் இதில், “இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்திருக்கிறோம். அனைவருடைய பாதுகாப்பும், நலமான வாழ்வும்தான் எங்களுக்கு முக்கியம். இந்தத் துயரமான உயிரிழப்புகளுக்கு ஆர்.சி.பி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.” என்று தெரிவித்தது.

பிரதமர் மோடி
இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, “பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஆர்.சி.பி-யின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துக்கு அருகே ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவாககுணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பெங்களூரு மக்களுடன் நான் நிற்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சாத்தியமான அனைத்து ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க வேண்டும். இந்த சோகமான சம்பவம் நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது.
எந்தவொரு கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல. எனவே, பொது நிகழ்வுகளுக்கான ஒவ்வொரு பாதுகாப்பு நெறிமுறையும் மதிப்பாய்வு செய்யப்பட்டு கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.
உயிர்கள்தான் எப்போதும் முதன்மை” என்று எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.