
பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார்.
கூடவே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இருப்பினும், இந்த சம்பவத்துக்கு மாநில அரசுதான் காரணம், அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
மறுபக்கம், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “இதுபோன்ற சம்பவம் எந்த மாநிலத்திலும் நடக்கலாம். எனவே, ஆளுங்கட்சியைக் குறைகூறி இதை அரசியலாக்க வேண்டாம்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் ஆர்.சி.பி அணி நிர்வாகம், “இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்திருக்கிறோம்.
அனைவருடைய பாதுகாப்பும், நலமான வாழ்வும்தான் எங்களுக்கு முக்கியம். இந்தத் துயரமான உயிரிழப்புகளுக்கு ஆர்.சி.பி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
நிலைமை குறித்து அறிந்தவுடன் நாங்கள் உடனடியாக எங்களின் திட்டத்தை மாற்றி, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பெற்றோம்.
எங்களின் ஆதரவாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்திருக்கிறது.