
தந்தை – மகன் யுத்தத்தால் தகித்துக் கிடக்கிறது பாமக. ராமதாஸ் கூட்டும் கூட்டங்களுக்கு போகக்கூடாது என அன்புக் கட்டளை போடுகிறது அன்புமணி தரப்பு. அதனால் தைலாபுரம் தோட்டமே டல்லடித்துக் கிடக்கிறது. அனைத்து அதிகாரமும் தனக்குத் தான் இருப்பதாகச் சொல்கிறார் ராமதாஸ். பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனக்கே அதிகாரம் என்கிறார் மகன் அன்புமணி. சென்னையில் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள்.
இதற்கு நடுவே, வன்னியர் சங்க நிர்வாகிகள் ஒருபக்கமும், ஜி.கே.மணி போன்றவர்கள் மறுபக்கமுமாக இருதரப்பும் சமாதானமாகி இயல்புநிலை திரும்பிவிடாதா என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில், பாமக-வுக்குள் நடக்கும் சமாச்சாரங்கள் குறித்து வன்னியர் சங்க தலைவரும், பாமக சட்ட திட்டங்களை வகுத்த குழுவில் இருந்தவருமான பு.தா.அருள்மொழியிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.