• June 4, 2025
  • NewsEditor
  • 0

காசாவில் நிலவி வரும் போர்ச்சூழலின் காரணமாக, நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால், கர்ப்பிணிகள் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதால், கருச்சிதைவுகள், குழந்தை இறந்தே பிறப்பது மற்றும் பிறவிக்குறைபாடுகளோடு குழந்தைகள் பிறத்தல் ஆகியவை காஸாவில் அதிகரித்து காணப்படுகிறது. ‘காசாவில் நிலவுகிற உணவுப்பஞ்சம் காரணமாக, அங்கு பிறக்கின்ற பச்சிளம் குழந்தைகளில் பத்தில் ஒரு குழந்தை எடைக்குறைவாக உள்ளது அல்லது குறைபிரசவத்தில் பிறக்கிறது’ என ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து தெரிவித்துள்ளது.

காசா

ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மார்ச் 2-ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் முழு முற்றுகை விதித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஓரளவு அது தளர்த்தப்பட்டது. என்றாலும், வலி நிவாரணிகள் உள்ளிட்ட அடிப்படை மருத்துவப் பொருட்கள் இன்னும் காசாவில் பற்றாக்குறையாகவே உள்ளது.

காசாவைச் சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணி ஒருவர், “இஸ்ரேலிய குண்டுவெடிப்பு மற்றும் வெளியேற்ற உத்தரவுகளால் நான் என் குழந்தையை இழந்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த நேரத்திலும் குறைப்பிரசவம் ஏற்படலாம். என் வயிற்றில் உள்ள குழந்தை வளர என் கருப்பையில் உள்ள திரவம் போதுமானதாக இல்லையோ என எனக்கு அச்சமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு முன்பும், இதேபோல என் கருப்பையில் இருக்கிற திரவம் குறைந்த காரணத்தால், வயிற்றில் உள்ள குழந்தை மிக ஆபத்தான நிலையில் இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சோர்வு காரணமாக என் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பு நேர்ந்ததாக கூறிய மருத்துவர்கள், கரு உயிர் வாழ்வதும் இறப்பதும் இறைவன் கையில் என்றனர்’’ என தன் அச்சம் மற்றும் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காசா இஸ்ரேல்
காசா – இஸ்ரேல்

குழந்தை மற்றும் மகப்பேறு பராமரிப்புத் தலைவரான டாக்டர் அஹ்மத் அல்-ஃபர்ரா என்பவர், “பிரசவத்துக்காக காத்திருக்கும் பெண்களது மனநிலை மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடவுள் கர்ப்பிணி பெண்களுக்கு உதவட்டும். கருவிலிருக்கும் குழந்தைகள் சரியாகக் கண்காணிக்கப்படவில்லை என்பதையும், தங்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறவில்லை என்பதையும் கர்ப்பிணிகளே நன்றாக அறிந்திருக்கின்றனர். இதனால், பிறக்கவிருக்கும் தங்கள் குழந்தைகள் குறைந்த எடையோடு பிறப்பர் அல்லது பிற உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவர் என தாய்மார்களே எதிர்பார்க்கின்றனர். என்னவொரு கொடுமை இது?

தொடர்ந்து உணவுப் பற்றாக்குறை நீடிப்பதால், பிரசவத்திற்குப் பின்னர், குழந்தைக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது அல்லது குழந்தைக்கு எவ்வாறு பால் கலவை பெறுவது என்பது குறித்து கர்ப்பிணிகள் மிகவும் கவலைப்படுகின்றனர்’’ என்கிறார் அவர்.

காசா

ஊட்டச்சத்து இழப்புக் காரணமாக தன் பச்சிளம் குழந்தையை மரணத்திடம் பறிகொடுத்த தாய் ஒருவர், “இந்த ஆண்டின் தொடக்கத்தில், போர் நிறுத்தத்தின்போது என் மகள் பிறந்தாள். ஆரம்பத்தில் என் மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாள். ஆனால், உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், நான் தாய்ப்பால் கொடுக்க சிரமப்பட்டேன். கடவுப்பாதைகள் மூடப்பட்ட பிறகு, எங்களுக்கு எல்லாமே மூடப்பட்டன. தேவையான மாவு இல்லை, சுத்தமான தண்ணீர் இல்லை, பழங்கள் மற்றும் கீரைகள் போன்ற உணவு வகைகள் எதுவும் கிடைக்கவில்லை. என் ஆரோக்கியமும் என் மகள் ஆரோக்கியமும் மோசமடைந்தது. அவளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நீரிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என் மகளை மரணத்திலிருந்து காப்பாற்று என இறைவனை வேண்டினேன். ஆனால், அவளை இழந்துவிட்டேன். அப்போது, இந்த உலகமே கேட்கும்படி கத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்த நாட்டின் கொடுமையிலிருந்து கடவுள் மட்டுமே என் மகளைக் காப்பாற்றினார்” எனக் கதறியிருக்கிறார்.

உலகத்தின் எதிர்காலத்தைக் கொன்றுவிட்டும், குறைப்பிரசவம் ஆக்கிவிட்டும் நாடே ஆண்டாலும் என்னப் பயன்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *