
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
2013 ன்னு நினைக்கிறேன் அப்போல்லாம் கொரட்டூர் லர்ந்து தினமும் ரயிலில் அடையார் க்கு வேலைக்கு வந்து போவேன். ரெண்டு ரயில் மாறி. (கொரட்டூரிலிருந்து கடற்கரை.. அங்கிருந்து கஸ்தூரிபா நகர்)
சாயந்திரம் நான் அலுவலகம்(Night shift) போகும் ரயிலில் வேலை முடிந்து.. சுனில் அண்ணாவும் வருவார் அம்பத்தூரிலிருந்து.
சுனில் அண்ணா வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். 55 வயது இருக்கும். அவரிடம் பழகிய பின்னர் நீங்க எந்த மாநிலம் என்று கேட்டதற்கு., “லே பையா அத ஏன் கேக்கற நான் நல்ல தமிழ் பேசுறேன்லே தமிழ் நாடு ன்னு வச்சுக்க ”
அது என்னமோ சரி தான் சுனில் அண்ணா பேசற தமிழ் அவ்வளவு தெளிவா இருக்கும்.
ரயிலில் எப்போதும் சுனில் அண்ணாவை சுற்றிலும் சிறு கூட்டமிருக்கும்.
ரயில் சரியா வில்லிவாக்கம் வந்ததும் உரத்த குரலில் பாடத் துவங்கிடுவார், “நான் ஏறிக்கரை மீதிருந்து எட்டுத்திச பாத்திருந்து” ன்னு ராஜா பாட்டை சுருதி சுத்தமா பாடுவார்.ஆனா தினமும் இதே பாட்டுதான்.
வழக்கமாக இந்த பாட்ட ராஜாவோட குரலில் தான் பாட முயற்சிப்பார்கள் ஆனா சுனில் அண்ணா அவரது குரலிலேயே பாடுவார்.
வில்லிவாக்கத்தில் ஆரம்பிச்ச பாட்ட வியாசர்பாடி ஜீவா வந்துதான் முடிப்பார் அந்தளவுக்கு நீட்டி முழக்கி ராகம் போட்டு பாடுவார் . தினமும் ஒரே இடம் தான் ஆரம்பிப்பதும் முடிவதும்.ராயபுரம் வந்ததும் இறங்கி சென்றுவிடுவார்.
கொஞ்ச நாட்களிலேயே என்னோடு நன்றாக பேச ஆரம்பித்தார். “லே பையா” ன்னு வாஞ்சையா அழைப்பார்.
சில நாட்கள் பாடாமல் அமைதியாக வருவார். அப்போதெல்லாம் அவரை யாரும் பாடச் சொல்லி தொந்தரவு செய்வதும் இல்லை. சன்னலின் வழியாக வெளியே அமைதியாக பார்த்துக் கொண்டு வருவார்.

ஒரு நாள் அவரிடம் கேட்டேன், “அண்ணா எதுக்கு தினமும் ஒரே பாட்டே பாடுறீங்க”
“லே பையா.. அந்த பாட்ட பாடித்தான் மஞ்சு வ கரெக்ட் பன்னேன் அவளுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. ராஜா பாட்டு ன்னா உசுரு அவளுக்கும் எனக்கும், ரொம்ப வருசம் முன்னாடி யாரும் இல்லாத தனி ஆளா இங்க வந்தேன் அப்போ எனக்கு தமிழ் சுத்தமா தெரியாது மொழி தெரியாததாலே நாள் முழுக்க உழைச்சாலும் கூலி சரியா கொடுக்காம மிரட்டுவாங்க “
” அப்போ தினமும் ரேடியோவில் வரும் இளையராஜா பாட்ட பாடி பாடித்தான் தான் தமிழ் நல்லா பேசக் கத்துக்கிட்டேன் “
“அவரு பாட்டு தான் எனக்கு மஞ்சுவையும் கொடுத்துச்சு.. தமிழையும் கத்து கொடுத்துச்சு”
நான், “சரி ண்ணா அவரோடது ஆயிரக்கணக்கான பாட்டு இருக்குல்லே அதுல வேற ஏதுனா ஒன்னு தம்பிக்காவ மாத்தி பாடுண்ணா”
“சரிடா பையா நான் பாடுறேன் ஆனா இன்னைக்கு இல்ல உன் பிறந்த நாள் அடுத்த மாதம் வருதுன்னு சொன்னேல்லே அன்னைக்கு பாடுறேன்” என்றபடி ராயபுரம் வந்ததும் இறங்கி சென்றார்.
அதிலிருந்து பேச்சு இளையராஜா வைப் பற்றியே இருந்தது.எங்களுக்கு தெரிந்த ராஜா பாடல்களை பற்றி பேசிக்கொண்டு வருவோம்.
சுனில் அண்ணா ஒரு நாள் “நான் ஹிந்தி பாட்டு கேட்டு வளர்ந்தவன் நான் சொல்றேன் நீங்க கொடுத்து வச்சுருக்கனும் ராஜா மாதிரி ஆளு இங்க பொறந்ததுக்கு” என்றார்.
என் பிறந்த நாளும் வந்தது, “லே பையா நீ கேட்ட மாதிரி இன்னைக்கு ஏறிக்கரை பாட்டு இல்ல…” என்று சிரித்தபடி பாடலின் இடையில் இருந்து ஆரம்பித்தார்
“பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்..
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்…
மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே
கனவில் ஆடும் நினைவு யாவும்
கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம்…
உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்…”
ரயிலின் தடக் தடக் சத்தத்தோடு சன்னலின் வழியாக காற்றோடு கலந்தது.. சுனில் அண்ணாவின் குரல்.
சுனில் அண்ணா சொன்னது போல் நாம கொடுத்து வச்சவங்க தான் !
-S. V. சிலம்பரசன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.