பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மாதம் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலை பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.கவினர் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிற்கும் குங்குமம் (சிந்தூர்) அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ”பா.ஜ.க-வினர் சிந்தூர் என்ற வார்த்தையை ஜோக்காக மாற்றிவிட்டனர். இது என்ன ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா? ஆப்ரேசன் சிந்தூர் பெயரில் பா.ஜ.க-வினர் வாக்கு கேட்கின்றனர்.
இவர்கள் சிந்தூர் என்ற வார்த்தையை ஜோக்காக மாற்றிவிட்டனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பெயரில் பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்வார்களா? இது என்ன ஒரு நாடு ஒரு கணவர் திட்டமா?” என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் மான் பஞ்சாப் இடைத்தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது பா.ஜ.கவினர் ஆப்ரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது மான் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டதை விமர்சனம் செய்தார்.
அரசியல் உள்நோக்கத்தோடு இப்பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி முதலில் தன்னை தேநீர் விற்பவர் என்று குறிப்பிட்டார். அதன் பிறகுத் தன்னைப் பாதுகாவலர் என்று குறிப்பிட்டார்.
இப்போது குங்குமம் விற்பனை செய்ய வந்திருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கு வங்க பயணம் குறித்து மம்தா பானர்ஜி குறிப்பிட்டு இருந்தார்.