
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை மூலம் குற்றவாளி ஞானசேகரின் செல்போன் அழைப்பு பட்டியலை பெற்று, யார் அந்த ‘சார்’ என்பதை கண்டறிந்து அதிமுக, பாஜக கட்சிகளே வெளியிட வேண்டியது தானே என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகும்கூட யார் அந்த ‘சார்’ என தொடர்ந்து அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பதிவெல்லாம் மக்களை ஏமாற்றும் செயலே.