
“அரசு பணிகளில் எங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படாததால் வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுக்கவும், பாலில் தொழிலில் ஈடுபடுவும் தள்ளப்படுகிறோம்..” என்று பட்டதாரி திருநங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்திற்கு எம்.ஏ.பி.எட் படித்த டட்லிகா முத்தீஸ்வரன் என்ற திருநங்கை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் ‘பெண் பாலினத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு பணி வழங்க இயலாது என டட்லிகா முத்தீஸ்வரனுக்கு திட்ட அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தான் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனக்கு பணி வழங்க வலியுறுத்தியும் டட்லிகா முத்தீஸ்வரன் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் டட்லிகா முத்தீஸ்வரன் பேசும்போது, “படித்த தன்னைப் போன்ற திருநங்கைகள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழி இல்லாத சூழ்நிலை உள்ளது. நிம்மதியாக வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இது போன்ற அரசுப்பணியில் நியமனம் செய்தால் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும். தமிழக அரசு பணிகளில் எங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவது கிடையாது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிப்பதால் வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுப்பது பாலில் தொழிலில் ஈடுபடுவது போன்ற தொழிலில் தள்ளப்படுகிறார்கள்” என்றார்.