
”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” எனக் கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 1125 நாள்கள் முடிந்துவிட்டது. 2026 மே 6-ம் தேதி அவருடையப் பதவிக்காலம் முடிகிறது. சொல்லப்போனால் இன்னும் சரியாக 338 நாள்கள் இருக்கிறது. அதற்குப்பிறகு யார் அடுத்த முதல்வர் என்றக் கேள்வியுடன் மக்களின் பதிலை அரசியல் சாசனம் எதிர்நோக்கும்.
ஒவ்வொரு இந்தியரும் தங்களின் அரசியல் உரிமையை நிறைவேற்றி, இந்தியாவின் ஜனநாயகக் கடமையாக தங்களுக்கான முதல்வரை தேர்வு செய்ய வேண்டும். அந்தத் தேர்வின் மூலம் ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும்’ என்பதை தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் மக்களாகிய நமக்கு இருக்கிறது.
இதற்கிடையில், ‘அடுத்த முறையும் தமிழ்நாட்டில் தி.மு.க-தான் ஆட்சியமைக்கும்’ என முதல்வர் ஸ்டாலின் அழுத்தமாகக் கூறிவருகிறார். அப்படியானால், தி.மு.க-வுக்கு அவ்வளவு பலம் இருக்கிறதா? முதல்வருக்கு இவ்வளவு நம்பிக்கை எப்படி வந்தது? கூட்டணிக் கணக்குகள், தற்போதைய 4 ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகள், சரிவுகள் எனப் பேசவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
அதற்கு முன்பு நாம் கடந்த தேர்தல் மூலம் ஜனநாயகம் நமகக்கு சொன்ன ஒரு கணக்குப் பாடத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், எப்போதும் மூன்றாவது அல்லது நான்காவது அணிகள்தான் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி – தோல்விகளை தீர்மானிக்கின்றன.
2016 தேர்தலில் அ.தி.மு.க 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று தோல்வியை சந்தித்தது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவிகிதம்தான்.
அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவிகிதம். தனித்து போட்டியிட்ட பா.ம.க 5.36 சதவிகிதம், பா.ஜ.க 2.86 சதவிகிதம், நாம் தமிழர் கட்சி 1.07 சதவிகிதம் என வாக்குகளை அறுவடை செய்திருந்தன. இதில் ஒரு சில கட்சிகள் தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்தால்கூட ஆட்சியே மாறியிருக்கலாம்.
அந்தத் தேர்தலுக்குப் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 45.38 சதவீத வாக்குகளுடன் 159 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க கூட்டணி 39.71 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது.
இரு கூட்டணிகளுக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 6 சதவிகிதம்தான். அந்தத் தேர்தலில் 3-வது இடம்பிடித்த நா.த.க பெற்ற வாக்குகள் 6.58 சதவிகிதம். அதேபோல், அ.ம.மு.க – தே.மு.தி.க 2.85 சதவிகிதமும், மக்கள் நீதி மையம் 2.73 சசதவிகிதமும் வாக்குகளை பெற்றன.
2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணி அப்படியே தொடர்கிறது என்றாலும், அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையலாம். வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பெரும் ஆரவாரத்துடன் அரசியலில் குதித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் இதுவரை கூட்டணி கட்சிகள் குறித்து பெரிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியிடலாம்.

சீமானும் – விஜய்யும் தி.மு.க-வை கடுமையாக எதிர்க்கிறார்கள். விஜய் பா.ஜ.க-வையும் சேர்த்து எதிர்க்கிறார். எனவே, தி.மு.க மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க-வுக்கு சாதகமான வாக்குகள், (அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருப்பதால்) த.வெ.க-வுக்குச் செல்லலாம். அதேப்போல (தி.மு.க-வுக்கு சாதகமான) பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளும் த.வெ.க-வுக்குப் போகலாம்.
மேலும், தி.மு.க, பா.ஜ.க-வை பிடிக்காத சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் வாக்குகளும் த.வெ.க – நா.த.க-வுக்கு போகலாம் என்பதால் தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் சத்திய சோதனைதான்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்களை அதிகரிக்கவும், சமூக ஊடகங்கள் மூலம் மக்களை அணுகவும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. தி.மு.க Showtime Consulting, Buzz and Chatter, PEN ஆகியவற்றுடன் இணைந்து களத்தில் நிற்கிறது. தி.மு.க-வுக்கு இணையான அணுகுமுறையுடன் ஜான் ஆரோக்கியசாமித் தலைமையிலும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையிலும் களத்தில் இறங்கியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
சமூக ஊடகப் பயன்பாட்டின் மூலம் வெற்றிகரமாக தன் அரசியல் வியூகங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் பா.ஜ.க இன்னொரு பக்கம். பா.ஜ.க-வுக்கு உறுதுணையாக கைகோர்த்திருக்கும் அ.தி.மு.க ஐ.டி விங்க் இன்னொருபக்கம் என கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு சமூக ஊடகப் போருக்கென பெரும் தொகை செலவாகும் என்பது புலப்படுகிறது.
2026 தேர்தலில் இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவு பலத்தில்தான் ‘உறுதியாக வெல்வோம்’ என தி.மு.க கூறுகிறதா? என்றக் கேள்வியுடன் ஊடகவியலாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “கூட்டணி பலம் என்றெல்லாம் இல்லை. ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கும் கட்சிகளின் ஏற்றம் இறக்கம் எனச் சூழல் மாறும். தற்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் நலிந்திருக்கிறது. உதாரணமாக ம.தி.மு.க 2021-ல் இருந்ததைப் போலக் கூட இப்போது இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.எம் கட்சிகளும் அப்படித்தான், நலிவை சந்தித்திருக்கின்றன.
அதேநேரம் வி.சி.க ஓரளவு வலுவான கட்சியாக வளர்ந்திருக்கிறது. இன்னும் கூட்டணிக்கு வரவேண்டிய கட்சிகளும் இருக்கின்றன.
தே.மு.தி.க இதுவரை அ.தி.மு.க – தி.மு.க என எந்தக் கட்சியுடனும் கூட்டணி தொடர்பாக அறிவிக்கவில்லை. ‘அடுத்த அவருட தொடக்கத்தில் அறிவிப்போம்’ எனக் கூறிவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இருந்த பா.ம.க-வும் ‘கூட்டணி குறித்து யோசிப்போம்’ எனக் கூறுகிறது.
எனவே, கூட்டணியின் பலத்தால்தான் தி.மு.க அப்படிக் கூறுகிறது எனச் சொல்ல முடியாது.

அதே நேரம், தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பே எந்தக் கட்சியும் கூட்டணி அமைப்பதில்லை. அப்படி அறிவித்துக்கொண்டக் கட்சிகள் உறுதியாக கூட்டணியை தக்கவைத்திருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை. எனவே, 2026 தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணி ஜனவரி – பிப்ரவரியில்தான் உறுதியாகும் எனக் கருதுகிறேன்.” என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, “கொடி அகற்றுவது – ஏற்றுவது தொடர்பாக பிரச்னைகள், சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றக் கோரிக்கை போன்றப் பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க தலைமையிலான அரசிடம் எங்கள் கட்சி சார்பில் முன்வைத்திருக்கிறோம். பொதுவாக எந்தக் கூட்டணியாக இருந்தாலும் செயல்பாட்டின் அடிப்படையில் சில முரண்பாடுகள் இருக்கும். ஆனால், கொள்கை ரீதியில் முரண்பாடுகள் இருந்தால் அந்தக் கூட்டணி நீடிக்காது.
2026-ல் மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சியின் ஆட்சி அமைய வேண்டுமானால், அதற்கு கூட்டணிக் கட்சிகளிடையே கோட்பாட்டுப் புரிதல் அவசியம். இதைத்தான் மதுரை கூட்டத்தில் ‘கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டணிக்கட்சிகளிடம் அணுசரித்துச் செல்ல வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்துகிறார். வலதுசாரி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. இடதுசாரி அரசியலை வலுப்படுத்தும் கட்சிகளின் கூட்டணிதான் முக்கியம் என்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
தி.மு.க – வி.சி.க கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களிடமும், இரு கட்சிகளின் தலைவர்களிடமும் போதுமான புரிதலும், நட்புணர்வும், தோழமையும் உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இரு கட்சிகளின் தலைவர்களும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதும், விவாதித்துக்கொள்வதும் நிகழ்கிறது. இரு கட்சிகளும் முன்னெடுக்கும் கோரிக்கைகளும், போராட்டங்களும் 2026-ல் பா.ஜ.க எந்தக் கட்சியின் ஊடாகவும் தமிழ்நாட்டில் நுழைந்துவிடக் கூடாது என்பதில் இருக்கும் தெளிவுதான் காரணம்.

தொடர்ந்து காங்கிரஸ் – வி.சி.க போன்றக் கட்சிகளின் ஆட்சியிலும் – அதிகாரத்திலும் பங்கு என்றக் கோரிக்கை குறித்து பேசிய வன்னி அரசு, “ஆட்சியில் – அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் வி.சி.க-விடமிருந்து 2016-க்கும் முன்பிருந்தே எழத் தொடங்கிவிட்டது. அது இந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கை. அதேநேரம், இந்தத் தேர்தலுக்கு எந்தக் கோரிக்கையை முதன்மைபடுத்துவது என்பதை கட்சியின் தலைவர்தான் முடிவு செய்வார்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க எதிர்ப்பு பரப்புரைதான் முன்னெடுக்கப்பட்டது. இந்த தேர்தலின் போதும் எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பரப்புரை செய்ய வேண்டும் என்பதை தலைவர் குறிப்பிடுவார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கம் தேர்தலின்போதுதான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. தேர்தலுக்குப் பிறகும் எங்களால் அதுதொடர்பாக தி.மு.க-விடம் பேச முடியும்.
எனவே எந்தச் சூழலில், எந்த நிலையில் அந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதை திருமாவளவன் முடிவு செய்வார்.
அதேநேரம், எங்களைப் போன்றவர்களுக்கு, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது ஜனநாயக ரீதியிலானது. இதை கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும்.
இது வி.சி.க-வுக்கான கோரிக்கை மட்டுமல்ல. அது எல்லாக் கட்சிகளுக்குமான கோரிக்கை. சுயமரியாதைக்கானக் கோரிக்கை. எனவே, அதை எல்லாக் கட்சிகளும் முன்வைத்து இந்த உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அடுத்த முறையும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்ற முதல்வர் ஸ்டாலினின் உறுதியான பேச்சுக்கு அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிதான் காரணம் என நினைக்கிறேன் எனப் போட்டுடைத்தார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
தொடர்ந்து பேசிய ஆர்.கே. ராதாகிருஷ்ணன், “பா.ஜ.க எங்கு இருக்கிறதோ அதற்கு நேர் எதிராகதான் சிறுபான்மையினர் வாக்குகள் வந்து விழும். யார் வெற்றிப்பெறுவார்களோ அவர்களுக்குதான் சிறுபான்மையினரின் வாக்குகள் இருக்கும். அப்படி பார்த்தால் தி.மு.க-வுக்குதான் இந்த வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் உறுதியானப் பேச்சுக்கு இது அடிப்படையாக இருக்கலாம்.

எனவே, தி.மு.க-வின் உறுதிக்கு பா.ஜ.க-வும் அதனுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க-வும்தான் காரணம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனக் கூட்டணிக்கட்சிகள் கோரிக்கையெல்லாம் வைக்க முடியாது. ஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டால், இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படலாம். தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டால் எந்தக் கூட்டணிக் கட்சியாலும் எதுவும் செய்யமுடியாது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த 4 ஆண்டுகளாக அ.தி.மு.க கடைபிடித்து வந்த மௌனம் தி.மு.க-வுக்கு லாபமாக அமைந்துவிட்டது. எந்தப் பிரச்னைக்கும் அ.தி.மு.க முழுமையாக குரல் கொடுக்கவில்லை. உதாரணமாக அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ எனக் கேட்கத் தொடங்கியவர்கள், அதோடு, அந்த வழக்கின் தீர்ப்பின் பிறகுதான் மீண்டும் ‘யார் அந்த சார்’ குறித்துப் பேசுகிறார்கள்.
எனவே கடந்த 4 ஆண்டுகளாக அ.தி.மு.க வேலை செய்யும் எதிர்க்கட்சியாக இருக்கவில்லை. அதன் விளைவுகள் வரும் தேர்தலில் மிக மோசமாக இருக்கும்.

அடுத்து முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சும், செயல்பாடுகளும் தி.மு.க-விற்கு லாபமாகிவிட்டது. அதேப் போலதான், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், மத்திய அரசின் நீட், புதிய கல்விக் கொள்கை, தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி நிறுத்தி வைப்பு, வெள்ளம் போன்ற பேரிடர்களில் நிதி வழங்காமை உள்ளிட்ட திமுக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த பல்வேறு சிக்கல்களை தி.மு.க சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
அது அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்படியாக, பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு சென்று சேரச் செய்திருக்கிறது. அதனால் பா.ஜ.க தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறது.
அதேப்போல பா.ம.க, தே.மு.தி.க போன்ற சிறிய கட்சிகள் அரசுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்புகளை பதிவு செய்துகொண்டே இருக்கும். ஆனால் இந்த முறை அப்படியான எதுவும் பெரிதாக கவனம் பெரும்படி இல்லை. இதெல்லாம் தி.மு.க-வுக்கு கிடைத்த லாபமாகப் பார்க்கலாம்.” என்றார்.
மேலும் தி.மு.க-வின் பிரச்னை குறித்து ஆர்.கே. ராதாகிருஷ்ணன், “தி.மு.க எதிர்க்கொள்ளும் மிக முக்கியமானப் பிரச்னை ஊழல். தமிழ்நாட்டின் எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் அந்தந்த வேலைக்கென ஒரு தொகை வசூலிக்கபடுகிறது. ஆட்சிக்கு வந்தும் அதைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது தி.மு.க மீது மக்களுக்கு இருக்கும் பெரும் சிக்கல்.
இரண்டாவது வாரிசு அரசியல். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் சுமார் 45 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்றவர். படிப்படியாக அதிகாரத்துக்கு வந்தவர். ஆனால்,
எனவே அவரை மக்கள் ஏற்றுக்கொண்டதுபோலத் தெரியவில்லை. தி.மு.க-வின் முக்கியப் பிரச்னை இவை இரண்டும் தான்.
அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். அதில் எதை நிறைவேற்றுவார்கள், எதை நிறைவேற்ற மாட்டார்கள் என்பது மக்களுக்கும் தெரியும்.
சில வாக்குறுதிகள் மாநில அரசின் அதிகாரத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்ற அரசியல் அறிவும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. உதாரணமாக நீட் தேர்வு ரத்து விவகாரத்தைப் பார்க்கலாம். நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு அரசின் எல்லை எது என்பது மக்களுக்குத் தெரியும்.
கல்வித் துறைக்கான நிதியை மத்திய அரசுதான் கொடுக்கவில்லை என்ற உண்மையும் தெரியும். எனவே, வாக்குறுதி குறித்து மக்கள் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள் என்பது என் எண்ணம்.” என விளக்கமாகப் பேசினார்.
தி.மு.க-வுக்கு முன்பு இருக்கும் இந்த சவால்களையும், சரிவுகளையும் மீதமிருக்கும் நாள்களில் எதிர்கொள்ள தி.மு.க கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஆட்சியும் திமுகதான் என்று பேசிய பேச்சு கனவாகாமல் இருக்கும். கட்சிகளின் வியூகம் எப்படி வெற்றியாக மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
