
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவின்போது நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, சென்னை சிஐசிடியுடன் இணைந்து இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய விழாவில் தமிழர்களான உத்தர பிரதேச மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். உ.பி.யின் பிரயாக்ராஜில் மொழிகளை பாலமாக்கி தேச ஒற்றுமைக்காக 49 ஆண்டுகளாக செயல்படும் பொதுநல அமைப்பு பாஷா சங்கம்.
இந்த சங்கம் கடந்த 34 ஆண்டுகளாக பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை வைக்க வலியுறுத்தி வந்தது. அந்த முயற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்து தமிழ் திசை நாளிதழும் தொடர்ந்து செய்திகள்வெளியிட்டு, பல்வேறு வகைகளில் உதவியது. இறுதியில் பிரயாக்ராஜ் டிஐஜியாக நியமிக்கப்பட்ட தமிழர் டாக்டர் என்.கொளஞ்சி முயற்சியால், மகா கும்பமேளா விழாவின் போது திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.