• June 1, 2025
  • NewsEditor
  • 0

தட்டையான பாதங்களைக் கொண்டவர்கள், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணிகளுக்கான தேர்விலிருந்து தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் ( MTC ) 364 மற்றும் மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் (SETC) 318 உட்பட தற்போது 3,274 ஓட்டுநர் காலியிடங்கள் உள்ளன. இதற்கு பலரும் விண்ணப்பித்து வரும் வேளையில் தட்டையான கால்களைக் கொண்டவர்கள் மாநிலத்தின் போக்குவரத்து கழகங்களில் வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் மாநில போக்குவரத்து துறை, ஓட்டுநர்களின் இந்த நிலையை பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தட்டையான பாதங்கள் இருந்தால், பிரேக் அழுத்துவதில் தாமதம் ஏற்படும் என்றும் இதனால் விபத்துக்கள் ஏற்படலாம் என்ற காரணங்களை கூறி அவர்கள் ஓட்டுநர் வேலைக்கு தகுதியானவர்கள் அல்ல என்ற புதிய வழிமுறைகளை சாலை போக்குவரத்து நிறுவனம் (இன்ஸ்டியூட் ஆப் ரோட் ட்ரான்ஸ்போர்ட்) தெரிவித்திருக்கிறது. இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டையான கால்கள் உடையவர்கள் வாகனம் ஓட்ட முடியாதா?

இது குறித்து எலும்பு மூட்டு மருத்துவர்கள் கூறுகையில், தட்டையான பாதங்களைக் கொண்ட காரணத்தால் மட்டும் ஒருவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இயல்பான வாழ்க்கையை வழிநடத்த முடியும். தட்டையான கால்களுடன் வேறு ஏதும் அறிகுறி இருந்தால் அதற்கு சிகிச்சை தேவைப்படும்.

தட்டையான பாதங்களால் வலி, வீக்கம் அல்லது ஏதோ ஒரு அசௌகரியம் இருந்தால் மட்டுமே அவை கவனிக்க கூடிய விஷயமாக கருத வேண்டும்.

ஓட்டுநர்களுக்கு சான்றளிக்கும் மருத்துவ வாரியங்களின் மருத்துவர்கள், தட்டையான பாதம் உள்ளவர்கள் பிரேக் அழுத்தும்போது மெதுவாக எதிர்வினையாற்றும் நேரத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெடல்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், ஓட்டுநர்கள் அசௌகரியத்தைத் தவிர்க்க தங்கள் தோரணையை மாற்றுவதால், முழங்கால்கள், இடுப்பு மற்றும் கீழ் முதுகு வரை பதற்றம் ஏற்படுகிறது. இந்த தொடர்ச்சியான மன அழுத்தம், மூட்டு வலிக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தட்டையான பாதம் என்பது

பாதங்களின் அடிப்பகுதியில் குதிகாலுக்கும் விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு வளைவு இருக்கும். இந்த வளைவு உடலின் எடையை கால் முழுவதும் பகிர்ந்துகொடுக்கவும், நடக்கும்போதும், ஓடும்போதும் ஏற்படும் அதிர்வுகளை தாங்கவும் உதவியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வளைவு இல்லாதவர்கள் ”தட்டையான பாதங்களை கொண்டவர்கள்” என்று கூறப்படுகிறார்கள்.

சிலருக்கு இந்த தட்டையான பாதங்கள் பிறவியிலிருந்து வரலாம் என்றும் வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் இது போன்ற நிலை உருவாகலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *