
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கவும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏஐடியூசி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2003-ம் ஆண்டு முதல் சில்லறை மதுபான வியாபாரத்தை தமிழக அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் நடைபெறும் சில்லறை மதுபான விற்பனைப் பிரிவில் சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு இயங்கங்களை நடத்தி வந்தனர்.