
சென்னை: சுகாதாரமற்ற உணவை விநியோகம் செய்த சொமோட்டோ நிறுவனமும், சம்பந்தப்பட்ட உணவகமும் இணைந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜுன் மம்மிடாடி என்ற ஆந்திரா மெஸ் உணவகத்தில் சொமோட்டோ மூலமாக கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதியன்று அசைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்ட ஜெகபிரபுவுக்கு சிறிது நேரத்தில் மூச்சுத் திணறலுடன், தலைச் சுற்றல், நெஞ்சுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீரானது.