
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, கொடைக்கானல், தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டன.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.