
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒருவர் வேகமாகச் சென்றார். அவரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் நிற்காமல் வேகமாகச் சென்றார்.
சந்தேகமடைந்த போலீஸார் அவரைப் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றவரைத் துப்பாக்க்கி முனையில் பிடித்தனர்.
பின்னர் அவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர், நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கீழகாடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடி கொள்ளையர் என்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். அப்போது அவர்கள், “கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பிடிபட்ட சந்திரகுமார் மீது கோவில்பட்டி, எட்டயபுரம், எப்போதும்வென்றான், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தக்கலை, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
வீடுகள், கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு எனப் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸார் சந்திரகுமாரைத் தேடி வந்தனர்.

அவரிடமிருந்து 3 பைக்குகள், அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர் மீது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொள்ளைச் சம்பவத்தை முடித்த பிறகு களக்காடு மலைப்பகுதியில் பதுங்கிக் கொள்வார்.
கொள்ளையில் ஈடுபடும் போது சி.சி.டி.வி கேமராவில் அவரது முகம் தெரியாமல் இருக்க முகமுடி, கையுறை அணிந்து கொள்வார்.
இதனால் அவரைப் பிடிப்பதில் போலீஸாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. தற்போது வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.