
‘சென்னை வெற்றி!’
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த சீசனில் சென்னையின் கடைசிப் போட்டி இதுதான். போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி தனது ஓய்வு குறித்து விரிவாக பேசியுள்ளார்.
‘ஓய்வு பற்றி தோனி!’
அவர் பேசியிருப்பதாவது, ‘ரசிகர்களின் இந்த ஆதரவு நன்றாக இருக்கிறது. இன்றைக்கு ஹவுஸ்புல்லாக இல்லை. ஆனால், நல்ல கூட்டம்தான். இந்த சீசன் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இதுதான் எங்களுடைய பெர்பெக்ட்டான ஆட்டம் என நினைக்கிறேன். என்னுடைய எதிர்காலம் பற்றி முடிவெடுக்க இன்னும் நான்கைந்து மாதங்கள் ஆகும். எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது.
ஒவ்வொரு சீசனுக்கும் நான் உடல் உறுதியைப் பேண 15 சதவிகிதம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது. வீரர்களின் பெர்பார்மென்ஸால் ஓய்வை அறிவிக்க வேண்டுமெனில், ஒரு சில வீரர்கள் 22 வயதிலேயே ஓய்வை அறிவிக்க வேண்டியிருக்கும். அதனால் அப்படியில்லை. வீரர்கள் எவ்வளவு உடற்தகுதியோடு இருக்கிறார்கள், எவ்வளவு பசியோடு இருக்கிறார்கள்.

அணிக்கு எப்படி பங்களிப்பு செய்கிறார்கள் என்பதே முக்கியம். எனக்கு நேரம் இருக்கப்போகிறது. ராஞ்சிக்கு செல்லப்போகிறேன். கொஞ்சம் பைக் ரைடு செல்லலாம் என நினைக்கிறேன். அதன்பிறகு முடிவெடுக்கலாம் என நினைக்கிறேன். நான் ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை. மீண்டும் வருகிறேன் என்றும் சொல்லவில்லை. இன்னும் நேரமிருக்கிறது.
முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகளை சென்னையில் ஆடினோம். அந்த 4 போட்டிகளிலும் சேஸ் செய்தோம். ஆனால், பிட்ச் ஆரம்பத்திலேயே பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. அதனால் எங்கள் மீது சேஸிங்கில் அழுத்தம் ஏறிவிட்டது. அதுதான் பிரச்னை. பேட்டிங் ஆர்டரைப் பற்றி எனக்கு அதிக கவலையிருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் எல்லாரும் பங்களிப்பு செய்திருந்தார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி காலில் விழுந்தபோது எனக்கு வயதாகிவிட்டது என்றுதான் தோன்றியது. என்னுடைய ஆண்ட்ரே சித்தார்த் இருக்கிறார். அவர் என் பக்கத்தில் அமர்ந்திருந்தபோது உன்னுடைய வயது என்னவென்று கேட்டேன். சரியாக என்னை விட 25 வயது குறைவாக இருந்தார். அதையெல்லாம் கேட்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டதாகத் தோன்றியது.’ என்றார்.