
உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஹாபூரில் தனியாருக்கு சொந்தமான மோனாட் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநில சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்)கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தியது. இதில் சுமார் 1,421 போலி சான்றிதழ்கள் கிடைத்தன.
இந்த வழக்கில் பல்கலையின் தலைவர் சவுத்ரி விஜயேந்திரா சிங் ஹுடா, இணை துணைவேந்தர் நிர்மல் சிங் உள்ளிட்ட 11 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எஸ்டிஎப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், இதுவரையில் சுமார் 2 லட்சம் போலி சான்றிதழ்கள் விநியோகித்திருப்பது தெரியவந்துள்ளது. தலைவர் ஹுடா மீது மேலும் 119 வழக்குகள் பதிவாகி விசாரணையில் இருப்பதும், அவருக்கு மோசடியில் சம்பாதித்த ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதும் தெரிந்துள்ளது.