
திருச்சி: பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-வது சதயவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு நேற்று பாஜக சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து தலைவர்களையும் போற்றும் கட்சியாக பாஜக உள்ளது. 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போதே இந்தியா முழுவதும் மறைக்கப்பட்ட அனைத்து தலைவர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவது, அனைத்து தலைவர்களின் புகழ், நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.