
புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வக்பு திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பு தொடர்பான 3 அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஸி அமர்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் தொடர்ந்தது.