
பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றின் வரும் இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்களுக்கு இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தை உள்ளது.
நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் குழந்தை லெமோரியா தனது மாமாவான சஞ்சய் என்பவருடன் தனது வீட்டருகே விளையாடி கொண்டு இருந்துள்ளது.
அப்போது திடீரென சஞ்சய், அந்த குழந்தையை தனது வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்றுள்ளான். அங்கு துணி துவைக்கும் கல்லில் குழந்தையை படுக்க வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து துண்டித்துள்ளான்.
குழந்தையின் கை கால்களை அமுக்கி பிடித்துக் கொண்டு ஈவு இரக்கமின்றி குழந்தையின் தலையை அறுத்து எடுத்த அவன், குழந்தையின் உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளான்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனாலும் அவர்களை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாத அந்த இளைஞன், சிறுமி லெமோரியாவின் தலையை அப்பகுதியில் இருந்த ஊரணியில் வீசியுள்ளான்.
இதனை அறிந்த எமனேஸ்வரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைபற்றினர். பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஊரணியில் வீசப்பட்ட குழந்தையின் தலையை மீட்டனர்.

இந்நிலையில் குழந்தையை துடிக்க துடிக்க கொலை செய்த அந்த கொடூர மாமன் சஞ்சய் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான். அவனை கைது செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது சஞ்சயின் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமின் பெறுவதற்காக தேசிங்குராஜா உதவியுள்ளார்.
அப்போது சஞ்சய் மனநலம் பாதித்தவர் என மருத்துவ சான்று பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சையை அவரது உறவினர்கள் பைத்தியம் என கூறி கேலி செய்துள்ளனர்.
இதனால் வழக்கறிஞர் தேசிங்குராஜாவை பழிவாங்க நினைத்த சஞ்சய், கஞ்சா போதையில் அவரது குழந்தையை கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளான். பரமக்குடி மக்களை பதைபதைக்க செய்த இந்த கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.