
நடுவானில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் பிஎஸ்-3 இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள்கள் தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் மே 18-ம் தேதி (நேற்று) விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, 17-ம் தேதி காலை 7.59 மணிக்கு கவுன்ட்-டவுன் தொடங்கியது.