
முகமூடி அணிந்த ஒருவன் சென்னையில் தொடர் கொலைகளைச் செய்கிறான். கொல்லப்பட்டவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்ற நோக்கத்துடன் உடல்களை எரித்துவிடுகிறான். இந்த வழக்கை விசாரிக்கும் துணை கமிஷனர் அரவிந்தன் (நவீன் சந்திரா), ஒரு சிறிய ஆதாரத்தைக் கொண்டு, கொலை செய்யப்படுபவர்கள் யார்? அவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரால் அந்த கொலையாளியை நெருங்க முடிந்ததா என்பது கதை.
புலன் விசாரணைப் படங்களில், கொலையாளி வரித்துக் கொண்டிருக்கும் உளவியல் காரணம், கொலை செய்யப்படுகிறவர்களுக்கு அவனுடன் இருக்கும் தொடர்பு ஆகியன நம்பகமாகவும் ஆழமாகவும் இருந்தால் தவிர, அதில் பார்வையாளர்களின் மனம் ஈடுபாடு காட்டாது. இந்த அடிப்படையான தர்க்கத்தில் நேர்மையான ஈடுபாட்டைக் காட்டியிருப்பதுடன், ‘இரட்டையர்’களைக் கொண்டு பிளாஷ் பேக் கதையை வடிவமைத்த விதமும் அதைப் படமாக்கிய விதமும் அபாரம் என்று சொல்ல வைக்கிறது.