
மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் நியமனம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2021-ம் ஆண்டு செப். 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பயோகெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த இந்திரா என்பவர், தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றபோதும், இறுதி அறிவிப்பாணையில் அவர் விண்ணப்பித்த பதவி இடம்பெறவில்லை. இதையடுத்து, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திரா வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.