ஒரு மனிதனுக்குள் இருக்கும் சாதிவெறி என்பது, தீயை விட ஆபத்தானது. அது, எத்தனை பேரை தீக்கிரையாக்கும் என்பதே தெரியாது. ஆனால், அந்த சாதியத் தீயை ‘நீயா நானா?’வில் தனது அறிவார்ந்த விவாதத்தால் ஊதி அணைத்து, ‘இதுதான் உண்மையான வீரம்’ என வெற்றி வாகைச் சூடியிருக்கிறார், பெயருக்கேற்றார்போலவே, உண்மையான ‘வீராதி’ வீரசெல்வி.
“சின்ன வயசிலேர்ந்து ரத்தத்தில ஊறினது” என்ற சிறுவனிடம், “ரத்தத்துல எப்படி தன்னால ஊறும்? இதெல்லாம் அசிங்கம்டா தம்பி” எனக்கூறி, ‘என் சாதிப்பெருமையை பேசும்போது மீசையை முறுக்கணும்னு தோணும். கண்ணுல ஒரு திமிரு, அகங்காரம் எல்லாமே தெரியும்.’ என்று பேசிய சிறுவனை ‘பிறப்பால் அனைவரும் சமம்’ என சொல்லவைத்திருக்கும் வீரசெல்வியைத்தொடர்புகொண்டு ‘உங்களால் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை நினைக்கும்போது எப்படி இருக்கு?” என்றோம்.
`திரும்ப மீட் பண்ணினேன்’
“என்னால அந்தத் தம்பி மாறிட்டான்னு முழு கிரெடிட்டையும் எடுத்துக்கமுடியாது. அவன் பேசின பிறகு, எல்லோரும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாம ஏதோ தப்பா பேசிட்டோம்னு உணர ஆரம்பிச்சிருக்கான். ஏன்னா, அந்த வீடியோ உலகம் முழுக்க வைரல் ஆக ஆரம்பிச்சிடுச்சு. அவன், மாறினதுக்கு அதுவும் காரணம். அவனை இப்போ திரும்ப மீட் பண்ணினேன். ‘நீங்க சொன்ன மாதிரியேதான்க்கா நடந்துச்சு. சாதி கட்சியில என்னை வேலைக்காக மட்டும்தான் பயன்படுத்திக்கிறாங்க. அங்கீகாரம் கொடுக்கமாட்றாங்க. வேலையை வாங்கிட்டு அனுப்பிடுறாங்க. எல்லாத்தையும் உணர்ந்துட்டேன்’னு ஃபீல் பண்ணி சொன்னான்.
அவனோட குடும்பம் சாதாரண கூலி வேலைக்கு போற குடும்பம்தான். இப்போதாவது, குடும்பத்தை பற்றிய புரிதலும், சமூகத்தைப் பற்றிய தெளிவும் வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்ன ஒண்ணு, வீடியோவுல தமிழ்ச்செல்வி அக்காவாலதான் மாறினேன்னு சொன்னான். ஆனா, என் பேரை மாற்றி சொல்லிட்டான். என் பேரு தமிழ்ச்செல்வி இல்ல. வீரசெல்வி. எல்லாரும் தமிழ்ச்செல்வி… தமிழ்ச்செல்வின்னு வீடியோ போட ஆரம்பிச்சுட்டாங்க. நான் சாதி பற்றி ஒரு தெளிவோட இருக்கிறதுல எங்கம்மாவுக்கு சந்தோஷம்.” என்றவர், தன்னோடு குடும்பம் பத்தி பேச ஆரம்பிக்கிறார்.
கண்கூடா பார்த்திருக்கேன்!
“நாங்க தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பாளமுத்தி கிராமம். அப்பா, மதியழகன். பாதி பெரியாரிஸ்ட்டுன்னு சொல்லலாம். அவர் திமுகக்காரர். சாதியெல்லாம் பெருசா பார்க்கமாட்டார். எங்கம்மா குடும்பம் கிராமத்தில் தலைமை குடும்பம். அப்படிப்பட்டக் குடும்பத்தில் பிறந்த எங்கம்மாவும் பெருசா சாதியெல்லாம் பார்க்கமாட்டாங்க. அம்மா நிறைய பேருக்கு ஃபீஸ் எல்லாம் கட்டி ஹெல்ப் பண்ணியிருக்காங்க. அப்பாவும் அம்மாவும் அப்படி இருந்ததாலதான், எல்லோரும் மனிதர்கள்தான்; எல்லோரும் சமம்தான்ங்கிற புரிதல் வந்தது.
எங்க ஊருக்கு பேருந்து வசதிக்கூட கிடையாது. ஆனா, எங்க ஊர்ல பட்டியிலின மக்கள் தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாதுன்னு சாதிக்கொடுமையெல்லாம் நிகழ்ந்துட்டிருக்கு. 100 ரூபாய் கூலி கொடுத்துட்டு 500 ரூபாய்க்கு வேலை வாங்குவாங்க. பத்து வயசு சிறுவன் 70 வயது முதியவரை பேரை விட்டு மரியாதை இல்லாம கூப்பிடுவான். இந்த சாதி ஆணவத்தையெல்லாம் கண்கூடா பார்த்திருக்கேன்.
என்னை மாதிரியே நிறையே பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க!
இந்தமாதிரி சாதிக்கொடுமை பண்றவங்க எல்லாம் என்கூட நெருங்கிப் பழகினவங்களா இருந்திருக்காங்க, சொந்தக்காரங்களா இருந்திருக்காங்க. சாதிக் கொடுமையால அடக்குமுறைக்கு உள்ளாகிற மக்களுக்குத்தான் வலியும் வேதனையும் அதிகம். ‘அவங்களை அடக்குமுறை பண்ணாதீங்க, அது தப்பு’ன்னு சொல்லக்கூடியவங்க எல்லா சாதியிலும் இருக்காங்க. அடக்குமுறை பன்ற கும்பலில் மனிதாபிமானமுள்ளவங்களும் இருப்பாங்க. அவங்களால வாயைக்கூட திறக்கமுடியாது. அப்படி வாயைத் திறக்கமுடியாம நானும் இருந்திருக்கேன்.
கிட்டத்தட்ட, ‘பரியேறும் பெருமாள்’ படத்துல வர்ற யோகிபாபு கேரக்டர் மாதிரிதான் நான் வாழ்ந்திருக்கேன். என்னை மாதிரியே நிறையே பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நான் அமைதியா இருந்ததுக்காக, இப்போ எல்லோர்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.
சாதியால, ஒரு புண்ணியமும் கிடையாது!
ஆனா, இப்போ எங்க உறவினர் பசங்க யாராவது, அடக்குமுறைக்குள்ளாகுறவங்களை பேரை விட்டு கூப்பிட்டா ‘வாயை உடைச்சுடுவேன்’னு தைரியமா சொல்லுவேன். எங்க வீட்டுல, எங்க குடும்பத்துல, எங்க உறவினர்கள் எல்லாருமே நான் கடுமையா எதிர்ப்பேன்னு பயப்படுவாங்க. சாதியால, ஒரு புண்ணியமும் கிடையாது.
2016 –ல் என் அப்பா இறந்துட்டார். நான், என்ஜீனியரிங் படிச்சிருக்கேன். என்னுடைய தங்கச்சியும் என்ஜீனியரிங் படிச்சிருக்கா. எங்கம்மா ரெண்டு பேரையும் நல்லா படிக்க வெச்சிருக்காங்க. அம்மா மல்லிகா ப்ளஸ் டூ படிச்சிருக்காங்க. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் காலேஜ்ல லேப் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்காங்க. அப்பா இறந்தாலும் நாங்க படிச்ச கல்விதான் எங்களை வளர்த்துக்கிட்டிருக்கு. நான், இப்போ சென்னையில ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். படிச்சாலே சாதியைப் பற்றின புரிதல் வரும். இந்த பிரபஞ்சத்துல நாம ஒரு துகள்தான் அப்படிங்கிறது புரிய வரும். அதனால, கல்விதான் நமக்கு ரொம்ப முக்கியம். அந்த தம்பிக்கு படிப்பு குறைவா இருக்கிறதாலதான் சமூகத்தைப் பற்றிய புரிதல் இல்லாம பேசிக்கிட்டிருந்தான்.
`படிப்பு ஒண்ணுதான் நம்மளை முன்னேற்றும்’
சமீபத்துல, ஒரு கட்சி மாநாடு நடந்துச்சு. ‘நம்ம சாதியினர் படிக்கல. ஆட்சியாளர்கள் படிப்பை கொடுக்கல. வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுட்டுக் கிடக்குறாங்க’ன்னு அக்கட்சி தலைவர் பேசுறார். அதே மேடையில், ‘நாங்க அக்னியிலருந்து பிறந்தவங்க’ன்னு சொல்லி சாதிவெறியையும் ஊட்டுறார். இப்படி சாதிவெறிய ஊட்டிக்கிட்டே இருந்தா, எப்படி படிக்கப் போவாங்க? 40 வருடமா சாதிவெறியை ஊட்டி ஊட்டி படிக்கவிடாம செஞ்சதே இந்தத் தலைவருங்கதான். அவங்க சுயநலத்துக்காக செய்யும் அரசியலை பெற்றோர்கள்தான் புரிஞ்சிக்கிட்டு பிள்ளைங்களை நல்லா படிக்கவெக்கணும். படிப்பு ஒண்ணுதான் நம்மளை முன்னேற்றும்.
படிப்பு எவ்ளோ முக்கியம்ங்கிறதை தம்பி தினகரனும் புரிஞ்சுக்கிட்டான். எல்லோரும் ட்ரோல் பண்ணி பண்ணி அவனோட பாடி லாங்வேஜ் மாறிடுச்சு. ராஜ வம்சம்னு சொல்லிக்கிட்டிருந்தான். இப்போ, அவனோட தோரணை, ராஜவம்ச கெத்து எல்லாம் காணாம போயிடுச்சு. அதனால, அவனை பாராட்டி வரவேற்கணுமே தவிர, மீண்டும் ட்ரோல் பண்ணி அவன் மனசை காயப்படுத்தக்கூடாது. அதுதான், என்னோட விருப்பம். ப்ளீஸ் தயவு செஞ்சு இனியும் அவனை ட்ரோல் பண்ணாதீங்க.” என்கிறார், வீரசெல்வி.