
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘படை தலைவன்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
ஸ்டன்ட் காட்சிகளில் விஜயகாந்த் பெரிதளவில் டூப் விரும்பமாட்டார் என அவரை வைத்து படமெடுத்த பல இயக்குநர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏ.ஆர்.முருகதாஸும் அது தொடர்பாக பேசியிருக்கிறார்.
பேச தொடங்கிய முருகதாஸ், ” ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் ஹெலிகாப்டர் காட்சியை எடுக்கும்போது நானும் அப்போ படப்பிடிப்பு தளத்தின் கீழேதான் இருந்தேன்.
அன்னைக்கு பிரேமலதா அண்ணியும், பசங்க ரெண்டு பேரும் அம்பாசிடர் கார்ல வந்திருந்தாங்க. எனக்கு இன்னைக்கு வரைக்கும் அது நினைவுல இருக்கு.
ஆனா, ஹெலிகாப்டர் காட்சியை எடுக்கும்போது அவங்க இல்ல. ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் அந்த காட்சிக்கு டூப் பயன்படுத்தலாம்னு கேப்டன்கிட்ட சொன்னாரு.
ஆனா, கேப்டன் ‘டூப் வேணாம். நானே பண்றேன்.

`அவனுக்கு மட்டும் என்ன ரெண்டு உயிரா இருக்கு’
அண்ணிக்கிட்ட மட்டும் டூப்னு சொல்லிடுங்க’னு சொன்னாரு. ஆனா, மாஸ்டர் டூப் பயன்படுத்தலாம்னு பரிந்துரை செய்தாரு.
அப்போ ‘டூப் போடுறவனுக்கும் ஒரு உயிர்தானயா இருக்கு! அவனுக்கு மட்டும் என்ன ரெண்டு உயிரா இருக்கு’னு கேப்டன் சொன்னாரு.
அந்த வார்த்தையைக் கேட்டதும் அவர் மேல எனக்கு பெரிய மரியாதை வந்திடுச்சு.
பல நடிகர்கள் டூப், கிராபிக்ஸ் பயன்படுத்திட்டு அந்தக் காட்சியை நான்தான் பண்ணினேன்னு சொல்வாங்க.
ஆனா, டூப் இல்லாமல் நடிச்சிட்டு அந்தக் காட்சியில டூப்தான் நடிச்சான்னு வெளில வந்து சொன்ன பெரிய மனுஷனை அப்போதான் நான் பார்த்தேன்.” என்றார்.