
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சாலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. இதில் சீனாவின் முயற்சிகள் எல்லாமே வீணானவை, அபத்தமானவை. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளிகளின் பெயரை மாற்ற சீனா முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.