
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ளதீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தி, போரின் நாயகனாக இந்தியா திகழ்ந்தது. அடுத்தடுத்து இந்தியா நடத்திய ஆக்ரோஷத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், உலக நாடுகள் மூலம் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. தவறை உணர்ந்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முயற்சிப்பதால் அதை ஏற்கும் மனநிலைக்கு இந்தியா வந்தது.