
சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று அதிகாலை 1 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை தாக்கியது.
ட்ரோன்கள் உதவியுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானும் பூஞ்ச் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் மத்திய அரசு எல்லைகளை மூடி இருக்கிறது. பாகிஸ்தானையொட்டிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கண்டதும் சுட உத்தரவு..!
அதோடு எல்லையோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து போலீஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோடு ராஜஸ்தான் மாநிலம் 1037 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. எல்லையில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தென்பட்டால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்தியா முழுவதும் 25 விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 10ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், லே, ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், ஜோத்பூர், சிம்லா, ஜாம்நகர், முந்த்ரா, போர்பந்தர், கண்ட்லா, புஜ் போன்ற 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுகோய்-30 ரக விமானங்கள் எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்கும் விதமாக ஜெய்சாலிமர், ஜோத்பூர் போன்ற நகரங்களில் நள்ளிரவில் இருந்து அதிகாலை 4 மணி மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அனைத்து போலீஸார் மற்றும் அரசு ஊழியர்களின் விடுமுறையை முதல்வர் ரத்து செய்துள்ளார்.