
புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடும். அப்போது, அதில் இருந்து தப்பித்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவே போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை. தாக்குதல் அபாயம் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, கல்பாக்கம், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிராவின் தாராபூர், உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லை மாவட்டங்கள் உட்பட 259 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை இன்று மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.