
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு‌.க.ஸ்டாலின், தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர், நிகழ்ச்சியில் பேசியதாவது: வணிகர் தினமான மே 5-ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படும் வகையிலான அறிவிப்பு, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.