‘சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதைக்கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில தலைவர் நயினார், தேசிய செயற்குழு உறுப்பினர் தமிழிசை, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

பாஜக ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் நயினார், “வங்கதேசத்தைப் பிரித்துக் கொடுப்பதில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் முன்பு போர் வந்தது. அப்போது அந்த நாட்டின் ஒரு படை வீரன் நமது நாட்டில் 10 பேருக்குச் சமம் எனப் பத்திரிகைகள் எழுதின. ஆனால் போர் முடித்ததும் 10 பாகிஸ்தானுக்கு ஒரு இந்திய வீரன் சமம் என மாற்றி எழுதின.

அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், ‘என்னுடைய இந்தியாவின் பாதி இடத்தை இழந்தால் கூட உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்கிற நாடு இருக்காது‘ என்றார்.

ரேவந்த் ரெட்டியை நான் வணங்குகிறேன்?

பிறகு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் பதிலடி கொடுத்தார், பிரதமர் மோடி. இன்றும் பாகிஸ்தான் வீரர்கள் அஞ்சிநடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லை. சிந்து நதி நீரை நிறுத்துவது சரியா எனக் கேள்வி கேட்கிறார்கள்.

அண்டை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நான் வணங்குகிறேன். கட்சி முக்கியம் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு.. தேசமும், நாடும் தான் முக்கியம் என நினைக்கிறார். அதனால்தான் பாகிஸ்தானைத் துண்டாட வேண்டும் எனச் சொன்ன மாபெரும் வீரன் ரேவந்த் ரெட்டிக்கு நான் தலைவணங்குகிறேன்.

பாஜக ஆர்ப்பாட்டம்

முதல்வர் என்ன சொல்கிறார்?

ஆனால் நம்முடைய முதல்வர் என்ன சொல்கிறார் என்றே தெரியவில்லை. அவர்கள் சிகிச்சைக்கு வந்தால் என்ன செய்வோம் எனக் கேட்கிறார்கள். இலங்கையிலிருந்து சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயார் இங்கு இறங்க முடியாமல் போன தமிழகம் தானே இது?. உங்களுக்கு எப்படி தாய்நாட்டுப் பற்று எப்படி இருக்கும்?.

எத்தனை மன்னர்களுக்கு நாம் அடிமையாக இருந்தோம். எத்தனை இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். அப்படி உங்களுக்கு நடந்தால்தான் தெரியும். எனவே தேசத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவோரைக் கைதாவது செய்ய வேண்டாமா?.

தேசிய புலனாய்வுத்துறை தமிழகத்தில் ஊடுருவியிருந்த 30 பேரைக் கைது செய்திருக்கிறது. ஆனால் தமிழக போலீஸ் ஊடுருவியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக பா.ஜ.க-வினர் பிரதமருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். தயவுசெய்து கடமையுடன் தமிழக முதல்வர் பணியாற்ற வேண்டும். 2026-ம் ஆண்டிலிருந்து நாங்கள் அந்த இடத்திலிருந்து கடமையைச் செய்வோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *