
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும்.