
ஹைதராபாத்: ‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலை ஒவைசி கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது: பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. அந்த நாடு இந்தியாவை அமைதியாக வாழவிடாது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து உதவி செய்யும் பாகிஸ்தானை, சர்வதேச பொருளாதார செயல் அதிரடிப் படை அமைப்பில் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானைவிட இந்தியா எப்போதும் வலிமையாகவே இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு.