
உலகப் புகழ்பெற்ற முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட், விரைவில் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, ஒமாஹா நகரில் வருடாந்திர கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக 94 வயதாகும் வாரன் பஃபெட், கூட்டத்தின் இறுதியில் ஆற்றிய உரையில், “நாளை பெர்க்ஷயர் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடைபெற உள்ளது. குழுவில் 11 இயக்குநர்கள் உள்ளனர். எனது குழந்தைகள் ஹோவி மற்றும் சூசி ஆகிய இரு இயக்குநர்களுக்கும் நான் அங்கு என்ன பேசப் போகிறேன் என்பது தெரியும்.
மற்றவர்களுக்கு இது புதிய செய்தியாக இருக்கும். ஆனால், கிரெக் ஏபெல் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
யார் இந்த கிரெக் ஏபெல்
கனடாவைச் சேர்ந்தவரான கிரெக் ஏபெல், 2000-ம் ஆண்டு பெர்க்ஷயர் குழுமம் மிட்அமெரிக்கன் எனர்ஜியை வாங்கியபோது அவர் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயரில் இணைந்தார். பெர்க்ஷயர் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். படிப்படியாக உயர்ந்து 2008-ல் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

அவரின் சமீபத்திய பேட்டியில, “மூலதன ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, வாரன் பஃபெட்டின் பொறுமையான மதிப்பு முதலீட்டு பாணியைத்தான் பின்பற்றுகிறேன். இதுதான் உண்மையில் முதலீட்டுத் தத்துவம். வாரன் பஃபெட்டும் அவரின் குழுவும் கடந்த 60 ஆண்டுகளாக மூலதனத்தை இதன் அடிப்படையில்தான் ஒதுக்கியுள்ளனர். அது மாறாது. நாம் முன்னேறும்போது எடுக்கும் அணுகுமுறை இதுதான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
வாரன் பஃபெட்டின் ஓய்வு அறிவிப்பு உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.