
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் தோற்றத்தில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கான அனுமதி பெறவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பட்டி காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ஒரு தனித்துவமான காரை பறிமுதல் செய்துள்ளனர். இது, ஜோன்பூர் மாவட்டம் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹிந்தாவைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவருக்கு சொந்தமானது. இவர் தனது காரை ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் மாற்றியமைத்துள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த இந்த கார், திருமணங்களில் மணமகனுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது.