
‘சென்னை தோல்வி!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
‘தோனி சொல்லும் காரணம்!’
அவர் பேசியிருப்பதாவது, ‘எங்களின் பேட்டிங் இன்று நன்றாகவே இருந்தது. இந்த சீசனில் முதல் முறையாக நல்ல ஸ்கோரை எட்டினோம். ஆனால், இந்த பிட்ச்சில் இது போதுமான ஸ்கோரா என்பது கேள்விக்குறியே. நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிக ரன்களை எடுத்திருக்க வேண்டும். பீல்டிங்கிலும் கேட்ச்களை பிடித்திருக்க வேண்டும்.
19 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தோம். 4 பந்துகளை இழந்து ஆல் அவுட் ஆனோம். அந்த இரண்டு ஓவர்களுக்குள் ஒரு 7 பந்தில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அந்த 7 பந்துகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. டெவால்ட் ப்ரெவிஸூக்கும் சாம் கரணுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் அசாத்தியமாக இருந்தது.

சாம் கரண் விடாப்பிடியாக முயன்று பார்க்கும் குணம் உடையவர். ஆனால், துரதிஷ்டவசமாக இதுவரைக்குமான போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கிய போதெல்லாம் மந்தமான பிட்ச்சாக அமைந்துவிட்டது. அதனால் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இன்றைய பிட்ச் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. சேப்பாக்கத்தில் எங்களுக்கு கிடைத்த சிறந்த பிட்ச் இது. டெவால்ட் ப்ரெவிஸ் ஒரு சிறந்த பீல்டரும் கூட.
அவரிடம் பந்தை அடித்து ஆடும் வலுவும் இருக்கிறது. அவரின் ஆட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வருங்காலத்தில் அவர் எங்கள் அணியின் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என நினைக்கிறேன்.’ என்றார்.