
மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் செயல்படுகிறது. இது தவிர, கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை திருநகரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் இப்பள்ளியை நடத்துகிறார். மதுரை கேகேநகர், அண்ணாநகர், பிபிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் சிறப்புக் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர்.