
தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்க, மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்தாண்டே ஆளும் திமுக களப்பணிகளை தொடங்கிவிட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டம் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி தலைமைக்கு வழங்கிவிட்டனர். இதில் இரண்டு பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற பரி்ந்துரையும் உள்ளது. கட்சியில் இளைஞரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் வழங்குவது என்பதே இதன் நோக்கமாகும். இதில் சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை.