
காஷ்மீரில் நடந்ததுபோல தமிழகத்தில் நிச்சயம் நடக்கவே நடக்காது. எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் கோவை, திருப்பூரில் வங்கதேசத்தினர் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அங்கு தேசவிரோத குற்றங்கள் நடக்காமல் இருக்க, அந்த மாவட்டங்களை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காஷ்மீரில் நடந்ததுபோல, தமிழகத்தில் நடந்துவிட கூடாது’’ என்றார்.