
கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சாமி கண்ணு எனும் நபருடைய மகனான முருகேசன் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் உள்ள இடைநிலை சாதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகளான கண்ணகியும் முருகேசனும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2003 -ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு இருவரும் அவரவர் வீட்டில் தங்களது திருமணத்தை மறைத்து வசித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல், இவர்களின் திருமண விவகாரம் பெண் வீட்டாரருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரச்சனை ஏற்படலாம் என்பதை உணர்ந்த முருகேசன் தனது மனைவியானக் கண்ணகியை அப்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மூங்கில் துறை பட்டி என்னும் தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
தமிழ்நாட்டை உலுக்கிய ஆணவ படுகொலை
தனது மகள் காணாமல் போய்விட்டார் எனத் தெரிந்து உறவினர்களுடன் சேர்ந்து கண்ணகியின் பெற்றோர் அவரைத் தேடி வந்துள்ளனர். மகள் கிடைக்காததால் 2003 ஜூலை எட்டாம் தேதி முருகேசனை கடத்தியுள்ளனர். பிறகு கண்ணகி இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரையும் பிடித்து வந்துள்ளனர். பிறகு இருவருக்கும் வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்து சடலங்களை அருகிலுள்ள சுடுகாட்டில் தனித்தனியாக எரித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அப்போது இந்த ஆணவக் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அப்போதைய விருதாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகளாக இணைத்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ 81 சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தினர். பிறகு அவர்களின் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில் விரிவானக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
வழக்கில் 2021ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பு வழங்கிய கடலூர் சிறப்பு நீதிமன்றம் கொலை செய்யப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி அவரது சகோதரர் மருதுபாண்டி, ஐயா சாமி, ரங்கசாமி , கந்தவேலு, ஜோதி வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புளி ராமதாஸ், சின்னதுரை உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆய்வாளராக இருந்து டிஎஸ்பியாக ஓய்வு பெற்ற செல்லமுத்து உதவி ஆய்வாளராக இருந்த தற்போது காவல்துறை ஆய்வாளராக உள்ள தமிழ்மாறன் உள்ளிட்டோரும் அடக்கம்.

இதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன் கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக கே.பி.தமிழ்மாறன், ஜி.வெங்கடேசன், ஜி.கந்தவேல், ஆர்.தனவேல், கே.ராமதாஸ், சி.துரைசாமி, டி.மருபாண்டியன் மற்றும் எம்.செல்லமுத்து ஆகிய எட்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs