• April 27, 2025
  • NewsEditor
  • 0

சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்த பிறகு உத்தவ் தாக்கரேயுடனோ அல்லது சிவசேனாவுடனோ ராஜ்தாக்கரே எந்த வித தொடர்பும் வைத்துக்கொண்டதில்லை. பல முறை இரண்டு பேரையும் கூட்டணிக்கு கொண்டு வர இரு கட்சி தலைவர்களும் முயற்சி எடுத்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை.

.ஆனால் இப்போது ராஜ்தாக்கரே தேர்தலில் படுதோல்வி அடைந்து எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் இருக்கிறார். உத்தவ் தாக்கரேயும் சொந்த கட்சியை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இழந்துவிட்டு இப்போது தனி மரமாக நிற்கிறார். இதையடுத்து முதல் முறையாக இருவரும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான முதல் அடியை ராஜ்தாக்கரே எடுத்து வைத்திருக்கிறார்.

`இந்தி’யா… மராத்தியா?

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டபோது மராத்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஜ் தாக்கரே இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படத்தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே தானும் ராஜ்தாக்கரேயுடன் இணைந்து செயல்படத்தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போது ராஜ்தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் தங்களது குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். ராஜ்தாக்கரே வரும் 29ம் தேதி நாடு திரும்புகிறார். உத்தவ் தாக்கரே மே 4ம் தேதி நாடு திரும்புகிறார். அவர்கள் இருவரும் நாடு திரும்பிய பிறகு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் சிவசேனா(உத்தவ்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,”மராத்தி மற்றும் மகாராஷ்டிரா நலனுக்காக ஒன்று சேர இதுவே சரியான தருணம். மராத்தியின் பெருமையை பாதுகாக்க சிவசேனா தொண்டர்கள் தயாராக இருக்கின்றனர்”என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ராஜ்தாக்கரேயுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதையே உத்தவ் தாக்கரேயின் இப்பதிவு காட்டுவதாக இருக்கிறது. ராஜ் தாக்கரேயை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறி வந்த பா.ஜ.க இப்போது அதனை கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இருப்பதால் ராஜ் தாக்கரேயின் கூட்டணி பா.ஜ.கவிற்கு தேவையற்றதாக இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் ராஜ்தாக்கரே கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து உத்தவ் தாக்கரே பரிசீலித்து வருவதாக உத்தவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக ராஜ்தாக்கரேயே கூட்டணிக்கு தயாராக இருப்பதாக தெரிவித்து இருப்பது உத்தவ் தாக்கரேயிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

ராஜ் தாக்கரே

கூட்டணிக்கு பா.ஜ.கவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்கவேண்டும் என்ற ஒரு நிபந்தனையை ராஜ் தாக்கரேயிக்கு உத்தவ் தரப்பில் வைக்கப்படுகிறது. இவ்வளவு நாட்களும் ராஜ் தாக்கரே பா.ஜ.கவை புகழ்ந்து பேசி வந்தார். எனவேதான் உத்தவ் தாக்கரே இது போன்ற ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன. இது குறித்து ராஜ்தாக்கரே கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”உத்தவ் தாக்கரே கூட்டணிக்கு முன்னெடுத்தால் நாங்களும் அதற்கு சாதகமாக பதிலளிப்போம். கூட்டணி குறித்து விரிவாக பேசி முடிவு செய்யப்படும். சமூக வலைத்தளங்கள் மூலம் கூட்டணி உறுதியாகாது” என்றார். இருவரது கூட்டணியை ஏக்நாத் ஷிண்டே தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *