
சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், அறிவியலாளருமான கஸ்தூரி ரங்கன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர். மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் என பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அந்தபொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.