
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை (ஏப்ரல் 22) மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பகுதியில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த அப்பாவி பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 26 பேர் மரணமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஶ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு நாடுமுழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சர்வதேச தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Rajinikanth கண்டனம்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “காஷ்மீரில் நடந்துள்ள தீவிரவாத செயல் கண்டிக்கத்தக்கது. அங்கே அமைதி திரும்பிக்கொண்டிருப்பது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை.
தாக்குதல் நடித்தியவர்களையும் அதற்கு பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இனி இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபடும் எண்ணம் கனவில் கூட வராதபடிக்கு தண்டனை வழங்க வேண்டும். அதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.